18 ஆண்டுக்கு முன்பே `வீடு' காட்டிய அறிகுறி - தூக்கத்திலே பிரிந்த உயிர்.. ஒவ்வொரு நொடியும் திகில்

Update: 2024-10-20 09:23 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, பழமை வாய்ந்த தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான நிலையில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

பாழடைந்த கட்டடம், இடிந்த நிலையில் மேற்கூரைகள், என பார்ப்பதற்கே பீதியை கிளப்பும் இந்த தொகுப்பு வீடுகளில் உயிர் பயத்துடன் வசித்து வருகின்றனர் அப்பாவி மக்கள்.....

இதில் கோரம் என்னவென்றால்...இப்படி மோசமான நிலையில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஓர் உயிரே பறிபோனது தான்....

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் கிராமத்தில், சுமார் 30 குடும்பங்களுக்கு கடந்த 1996ம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கட்டிக்கொடுத்து 10 ஆண்டுகள் மட்டுமே நல்ல நிலையில் இருந்த வீடுகள், அதன் பின்னர் உறுதித்தன்மையை இழக்கத் தொடங்கியதாம்.

மேற்கூரை இடிந்தது, பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து விழுவது, மழை பெய்யும் போதெல்லாம் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் சிமெண்ட் பெயர்ந்து விழுவது என குடியிருப்பவர்கள் அல்லல்பட்டு வந்தனர்..

இப்படி ஆண்டுகள் செல்ல செல்ல, வீட்டின் நிலை மோசமாகி அபாயகரமான நிலையை எட்டியுள்ள சூழலில், இரவு நேரத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், சின்னபொண்ணு என்ற 55 வயதான பெண் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்....

சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்,

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து இடிந்த வீட்டை பார்வையிட்டனர்.

இதுகுறித்து பேசிய வார்டு மெம்பரான நாகர், 10 வருடத்திற்கு மேலான கோரிக்கை ஏற்கபடாமல் இருந்த சூழலில் தற்போது உயிரே போய்விட்டது என வேதனை தெரிவிக்கிறார்..

மழை காலம் நெருங்கியுள்ளதால் தார்பாய்களை கொண்டு மேற்கூரையை மூடி ஆபத்தான முறையில் உயிரை பாதுகாத்து வரும் மக்கள், ஒவ்வொரு நொடியையும் பீதியிலேயே நகர்த்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்...

Tags:    

மேலும் செய்திகள்