ஐபிஎல் 2022 - முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-03-26 20:06 GMT
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலத்துடன் தொடங்கி உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய உத்தப்பா 28 ரன்களிலும், ராயுடு 15 ரன்களிலும், ஷிவம் துபே 3 ரன்களிலும் ஆட்டமிழக்கவே சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை அணி கவுரவமான இலக்கை நோக்கி சென்றது. இறுதியாக, தோனி அதிரடி காட்டவே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 131 ரன்கள் எடுத்தது. தோனி 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்