பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை..! காவல் ஆய்வாளருக்கு பறந்த நோட்டீஸ் | Chennai
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்க்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் முடிவு செய்துள்ளது.
உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த, பட்டியலின, மனவளர்ச்சி குன்றிய 20 வயது பெண், கடந்த மே மாதம் 18-ஆம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த பெண்ணை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்ட நாகர்கோயிலைச் சேர்ந்த ஆண்டனி ஆகாஷ் என்பவரை பெண்ணின் உறவினர்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அதன் பிறகும் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பெண்ணின் பெற்றோர், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், அவருடைய பெற்றோர், அவருடைய தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் ஆஜரானார்கள். மனுவை விசாரித்த ஆணையம், இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை நவம்பர் 11-ஆம் தேதிக்குள் சேர்க்க காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.