குஜராத் : கல்லூரி மாணவிகளிடம் "மாதவிடாய்" சோதனை

குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

Update: 2020-02-15 21:08 GMT
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதியில் சுவாமி நாராயண் அறக்கட்டளை, ஷாகாஜ்ஆனந்த் பெண்கள் இன்ஸ்டியுட் ஒன்றை நடத்தி வருகிறது. கடந்த 11 ஆம் தேதி உணவு இடைவேளையின் போது, விடுதிக்கு வந்த 60 மேற்பட்ட மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டி, அவர்களுக்கு மாதவிடாய் வந்ததா என பெண் ஊழியர்கள் சிலர் பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வர் ரீட்டா ராணிங்கா உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவிகள் புகார் அளிக்க முன்வராததால் வழக்கு பதிவு செய்யமுடியவில்லை என கூறப்படுகிறது. ஒரு மாணவி புகார் அளித்தாலும் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சவுரப் டொலும்பியா தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக புஜ் பகுதி போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக அம்மாநில மகளிர் ஆணைய தலைவர் லிலா அங்கோலியா தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விசாரிக்க, ஒரு குழுவை அமைத்துள்ளது.  சுவாமி நாராயண் அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்