20 நிமிடத்தில் 45 செய்திகள்..| இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

Update: 2023-06-02 14:27 GMT

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில், 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமைய வேண்டும் என தெரிவித்தார். இதில் உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், யுவராஜ் உட்பட 8 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும், இருவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் வழக்கில் வெற்றி பெற, 3 வழிமுறைகள் உதவியதாகவும், இதில் ஊடகங்களின் பங்கு உள்ளதாகவும் கோல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார். முதலில் தற்கொலை போன்று ஜோடிக்கப்பட்ட நிலையில், ரயில் ஏறியிருந்தால் கழுத்து நசுங்கியிருக்கும் என்பதை சுட்டிக்காட்டி தண்டனை பெற்று தந்ததாக மோகன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்