தீபா தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு
தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரிய மனு மீது தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு 'தலைவி'' என்ற படமும், ''குயின்'' என்ற இணையதள தொடரும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டுக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு தீபா என்பதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை என இயக்குநர் விஜய் தரப்பிலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த தொடரை எடுக்கவில்லை என கவுதம் மேனன் தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீபா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.