விடிய விடிய வயலில் நடந்த புதையல் வேட்டை
ஒரு ஊரே ஒன்னு சேர்ந்து விவசாய நிலத்துல விடிய விடிய தங்கத்த தேடி பூமியை தோண்டி இருக்காங்க.... CHHAAVA படம் பார்த்த வைபில் கிராம மக்கள் ஹண்டர்களான கதை இது...
தலையில் டார்ச் லைட்... கையில் மெடல் டிடெக்டர்.... கடப்பாறை, மண்வெட்டி, மண் சலிக்கும் சல்லடை... என இருளை அலற விட்டு கொண்டிருக்கும் இவர்களை பார்த்து, கொள்ளை கும்பல் என்று நினைத்து விட வேண்டாம்...
இவர்கள் அனைவரும் இங்கே நடத்திக் கொண்டிருப்பது தங்க வேட்டை...
தங்க புதையலை எடுக்க இப்படி விடிய விடிய விவசாய நிலையத்தில் அகழ்வாராய்ச்சியை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் ஒரே காரணம் CHHAAVA திரைப்படம்...
ஆசிர்கார் கோட்டையில் தங்கம் புதைந்து கிடப்பதாக வெளியான காட்சிகளை பார்த்த வைபில், இரவோடு இரவாக கடப்பாறை சல்லடையுடன் களம் கண்டிருக்கிறது இந்த கூட்டம்...
விடிய விடிய தோண்டியும் ஒன்றும் கிடைக்காத விரக்தியில் வெறும் கையோடு மக்கள் வீடு திரும்பியது தான் வேடிக்கையிலும் வேடிக்கை...
CHHAAVA..... மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்.
இந்த திரைப்படம் சாவா என்ற நாவலின் தழுவலாகும். பேரரசர் சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போரே இந்த படத்தின் கதை.
லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக மிரட்ட, நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 500 கோடி வசூலை வாரி குவித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் பார்த்த வைபில் உணர்ச்சி பெருக்கெடுத்த பல இளைஞர்கள், தியேட்டரிலேயே சம்பாஜி மன்னரின் பெருமையை போற்றி கோஷமிட்டனர்.
இந்த பெருமைமிகு விஷியங்களுக்கு நடுவே சில ரசிகர்கள் ஆர்வத்தில் செய்த கூத்து தான் இந்த தங்கவேட்டை..
CHHAAVA திரைப்படத்தில் மத்தியபிரதேசம் மாநிலம் புர்கான்பூர் அடுத்த ஆசிர்கர் கோட்டை அருகே முகலாய காலத்து தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதை உண்மை என நம்பிய அப்பகுதி வாசிகள், தியேட்டரை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ஆசிர்கர் கோட்டை அருகே உள்ள விவசாய நிலங்களை சூழ்ந்திருக்கிறார்கள்.
ஓவர் நைட்டில் கோடீஸ்வரனாக மாற ஆசைப்பட்ட அந்த கூட்டம், முகலாய காலத்து தங்க நாணயங்களையும் புதையலையும் தோண்டி எடுக்க கையிலே கடப்பாறை மண் வெட்டியுடன் பூமியை பிளக்க தொடங்கினார்கள்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய தங்க தேடுதல் வேட்டை, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும் தொடர்ந்திருக்கிறது. கடப்பாறையில் தோண்டி கிடைக்காததால், டெக்னாலஜியை பயன்படுத்தி தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் டார்ச் லைட், மெட்டல் டிடெக்டர், போன்ற ட்ரஷர் ஹன்டர் கருவிகளை வாங்கி வந்து தோண்ட தொடங்கி இருக்கிறார்கள்... விவசாய நிலங்களை அங்குலம் அங்குலமாக தோண்டி, சல்லடையை வைத்து மண்ணை சலித்து தீவிரமாக தேடி இருக்கிறார்கள்.
ஊரே ஆளுக்கு ஒரு இடத்தை பங்குபோட்டு 3 முதல் நான்கு அடி ஆழம் வரை தோண்டி புதையலை தேடி உள்ளனர். விடிய விடிய 3 மணி வரை அந்த தேடுதல் வேட்டை தொடர்ந்திருக்கிறது. இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள்.
போலீசாரை கண்ட கூட்டம் தங்கமாவது புதையலாவது ஆளைவிடுங்க சாமி என அலறி அடித்து ஓடி இருக்கிறார்கள்.
அதன்பிறகு தான் அது வெறும் திரைப்படத்தில் கூறப்பட்ட வரலாற்று கதை என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அப்படியே முகலாய காலத்து பொக்கிஷங்கள் மண்ணில் புதைந்திருந்தாலும் கூட, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெறும் 3 அடி ஆழத்தில் அது இருக்குமா என்பதெல்லாம் சாத்தியமற்றது.
நீண்ட நேர முயற்சிக்கு பின்னே இந்த உண்மை புரிந்த மக்கள் வெறுங்கையோடு வீடு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு நேரம் போராடியும் குண்டுமணி தங்கம் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை... இதனால் அப்பகுதியில் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் நாசமானது.
மக்கள் விடிய விடிய தோண்டிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது...
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், சட்ட விரோதமான முறையில் அகழ்வாராய்ச்சி நடத்திய குற்றத்திற்காக அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.