அரக்கர்களாக மாறிய 17 உறவினர்கள்.. 40 ஆண்டுகள் வசித்த வீடு தரைமட்டம் - மழையிலும் வெயிலிலும் வாடும் குடும்பம்

x

கன்னியாகுமரியில், 40 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்த வீட்டை உறவினர்கள் இடித்து தரைமட்டமாக்கியதால், இடிந்து கிடக்கும் வீட்டில் ஒரு குடும்பம் பரிதவித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் காடஞ்சேரி குருசிவிளையை சேர்ந்த பாக்கியம் - மந்திரன் தம்பதியருக்கு வசந்தா, அன்னமுத்து ஆகிய மகள்கள் உள்ளனர். 3 சென்ட் நிலத்தை வசந்தா பெயரில் பெற்றோர் எழுதிக்கொடுத்தனர். பாக்கியம், மந்திரன் இறந்ததால் வசந்தா தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்தார். அன்னமுத்துவை தனது இடத்தில் தங்க வைத்தார். கடந்த 40 ஆண்டுகளாக மகள் ஜெயந்தி மற்றும் கணவருடன் அன்னமுத்து வசித்து வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஜெயந்திக்கு அந்த இடத்தை வசந்தா எழுதிக்கொடுக்க முற்பட்டபோது, அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயந்தி உட்பட வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டை அடியாட்களுடன் அடித்து நொறுக்கினர். போலீசார் விசாரணை நடத்தி 17 பேர் மீது வழக்குப்பதிந்தனர். வீட்டை இழந்த ஜெயந்தி குடும்பத்தினர், மழையில் நனைந்தும், வெயிலில் வாடியும், இடிந்த வீட்டில் வசிக்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்