2வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு : முதல் கணவர் ஓட ஓட வெட்டிக் கொலை
பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த முதல் கணவர் மதுரையில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த அனிதாவை பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ்குமாரை விட்டு பிரிந்து சென்ற அனிதா, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அனிதாவுக்கு தூத்துக்குடியை சேர்ந்த செந்தில்
என்பவரை பெற்றோர்கள் இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர். செந்திலுடன் திருமணம் ஆன நிலையில் அனிதா, முதல் கணவர் சதீஷ்குமாருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இரண்டாவது கணவர் செந்தில் மற்றும் அனிதாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், சதீஷ்குமார், அனிதாவை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு பேச்சு வார்த்தை நடந்துகொண்டு இருந்த போது, சதீஷ்குமார் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது வெளியே காத்திருந்த அனிதாவின் சகோதரன் உள்ளிட்ட 4 பேர் சதீஷ்குமாரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story