பிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்

மருத்துவக் கல்லூரி மாணவிக்கும், காவல்துறை ஊழியர் ஒருவருக்கும் முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் வேல் என்பவர்  தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவில் காவலராக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். 

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த, அன்னியூர் கிராமத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி சரஸ்வதிக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

சரஸ்வதியும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வநதுள்ளார்.  இந்நிலையில் சரஸ்வதி தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, சொந்த ஊரான அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார். 

இதையடுத்து காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக காவலர் கார்த்திக்வேல்,கேக்குடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். கதவை திறந்து காதலனை வரவேற்றது சரஸ்வதியின் குடும்பம்.  

பிறந்த நாள் கேக்கை பரிசளித்த கார்த்திக்வேல், சரஸ்வதியுடன் பேசியுள்ளார். ஏற்கெனவே இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பு இருந்துவர, அதைச் சரிசெய்ய கார்த்திக்வேல் முயன்றுள்ளார் . 

அந்த வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொன்ற கர்த்திக்வேல், தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சரஸ்வதி செவிலியராக பணியாற்றி வந்தபோது, கார்த்திக்வேலுடன் மலர்ந்த காதல், மருத்துவ கல்லூரி மாணவியானவுடன் கருகத் தொடங்கியதாகத் தெரிகிறது. 

மருத்துவப் படிப்பில் சேர்ந்த சரஸ்வதி காதலை புறம்தள்ளி முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கார்த்திக்வேல் தனது பழைய காதலை மருத்துவ மாணவியான சரஸ்வதியிடம் தேடத் துவங்க, இருவருக்குமான கசப்பு பெருகியுள்ளது. அந்த கசப்பு அவ்வப்போது வார்த்தைகளில் வெளிப்பட்டு இருவருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இடைவெளியை சரிசெய்து, தனது பழைய காதலைப் புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்த கார்த்திக்வேல், சரஸ்வதியின் பிறந்தநாளான இன்று அதிகாலை அன்னியூருக்குச் சென்றுள்ளார். ஆனால் என்ன காரணத்தாலோ, பிறந்த நாள் கேக்குடன், துப்பாகியையும் எடுத்துச் சென்றுள்ளார் கார்த்திக். முதலில் வாழ்த்துச் சொன்னபோது, சரஸ்வதியின் பெற்றோர் அருகில் இருக்க, அடுத்து காதல் பற்றி கார்த்திக் பேச்செடுத்த நிலையில் அந்த பிறந்த நாள் வீடு, தன் அடையாளத்தை இழக்கத் துவங்கியது. இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம், கண்முன் சரஸ்வதிக்கு நேரப் போகும் கொடூரம் இவற்றையெல்லாம் அறியாத சரஸ்வதியின் தந்தையும், சகோதரியும் இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தபோதுதான், துப்பாக்கி குண்டுகள் முழங்க, மகளின் உயிர் நொடியில் பறிபோனது. இன்னொரு குண்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்த கார்த்திக் உயிரையும் பறித்தது. 

பிறந்த நாள் பாட்டு ஒலிக்க வேண்டிய அந்த வீட்டில் அழுகுரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. ஊரே அந்த வீட்டின் முன் திரள போலீஸும் வந்து விசாரணையைத் துவங்கியது. இருரின் உடல்களை மீட்ட போலீஸார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். காதலராக மாறிய காவலர் தன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக துப்பாக்கி குண்டுகளை வழங்கி விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளது.   



Next Story

மேலும் செய்திகள்