லெபனானில் நடந்த அதிபயங்கரம்... செய்தது `மொசாட்' அல்ல; வயநாட்டு மலையாளி..?

x

லெபனானில் பேஜர் - வாக்கி டாக்கி வெடித்துச் சிதறிய இரட்டைத் தாக்குதல் விவகாரத்தில் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் பெயரும் அடிபடுவது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது... இதுபற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

இஸ்ரேல்-காசா போர் உக்கிரமாக நடந்து வரும் சூழலில்...காசாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து லெபனானில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல் உலகையே உலுக்கியது...

மருத்துவமனைகள்...கடைகள்...சந்தைகள் என பொது இடங்களில் ஹிஸ்புல்லாவினர் வைத்திருந்த பேஜர்களும்...வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின...

உயிர்கள் பலியாகின...ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இந்த சூழலில்...பேஜர் தாக்குதலில் இந்தியர் பெயரும் அடிபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் இப்போது நார்வே குடிமகன்...

37 வயதான ரின்சனுக்கு பல்கேரியாவில் சொந்தமாக உள்ள ஒரு நிறுவனம் தான் ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்களை விநியோகித்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன...

முதலில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்தின் மீதுதான் அனைவரின் பார்வையும் திரும்பியது...

மொசாத் தான் பேட்டரிக்குள் வெடிமருந்துகளை மறைத்து வைத்து பேஜர்களை விநியோகிக்க காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது...

ஹங்கேரி தலைநகர் புதபெஸ்டில் தைவான் நாட்டின் கோல்டு அப்பல்லோ நிறுவனம் பெயரில் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் பேஜர்களைத் தயாரித்தது...

இந்த நிறுவனங்கள் மொசாத்தால் உருவாக்கப்பட்டவையாம்...

கடந்த பிப்ரவரியில் பிஏசி நிறுவனத்திடம் இருந்து நார்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் பேஜர்களை கொள்முதல் செய்து ஹிஸ்புல்லா அமைப்பிற்கு விநியோகித்துள்ளனவாம்...

நார்டா குளோபல் லிமிடெட் பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் 2022ல் பதிவு செய்யப்பட்டுள்ளது...

அதன் உரிமையாளர் தான் ரின்சன் ஜோஸ்...இவர் இஸ்ரேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது...

பேஜர்கள் வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ரின்சனும் அவரது மனைவியும் மாயமானது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது...

வெடித்துச் சிதறிய பேஜர்கள் பல்கேரியாவில் ஏற்றுமதியோ...இறக்குமதியோ...ஏன் தயாரிக்கவோ படவில்லை என பல்கேரிய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது...

மேலும் ரின்சன் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரின்சனின் தந்தை ஜோஸ் கேரளாவின் வயநாடு மாவட்டம், மானந்தவாடியில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்...

மனைவியுடன் ரின்சன் நார்வேயின் ஒஸ்லோ நகரில் செட்டில் ஆன நிலையில்...கடந்த 3 நாள்களாக அவரை உறவினர்களும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்..

அவர் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார் என குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

வேண்டுமென்றே இந்தத் தாக்குதலில் இழுத்து விடப்பட்டிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்...

ரின்சனை கைது செய்து விசாரணை நடத்தினால் பேஜர் தாக்குதலின் முழுமையான பின்னணி தெரியவரும் என்பதால் அவர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்