இந்தி தேசிய மொழியா? மோதிகொள்ளும் உச்ச நட்சத்திரங்கள்

இந்தி மொழி தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும், கன்னட நடிகர் கிச்சா சுதீபும் ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்ட விவகாரம் பேசு பொருளாகி உள்ளது.
x
சமீப காலமாக தென் இந்திய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், படைப்பு மற்றும் விமர்சன ரீதியாகவும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, அண்மையில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம்...

கன்னட திரைப்படமாக இருந்தாலும், இந்தி, தமிழ் உள்ளிட்ட கிட்டதட்ட வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது, கே.ஜி.எப். 2...

இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 படம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும், கன்னட நடிகர் கிச்சா சுதீபும், ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்ட விவகாரம் பேசு பொருளாகி உள்ளது.

KGF - 2 படத்தின் வெற்றி குறித்து பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், "ஒரு கன்னட படம், இந்தியா முழுவதுக்குமான பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டதாக எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால், ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல, பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது, அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன, ஆனால் வெற்றி பெற போராடுகின்றன, இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம் என தெரிவித்தார்...


இதனிடையே, கிச்சா சுதீபின் பேச்சை கண்டிக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

"இந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னட படங்களை ஏன், இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், இப்போதும், எப்போதும் இந்தி தான் இந்தியாவின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி எனவும் அவர் குறிப்பிட்டு விவகாரத்தை பெரிதாக்கினார்.

இதற்கு பதில் ட்விட் செய்த கிச்சா சுதீப், நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்கு புரிந்தது. ஆனால், எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால் உங்கள் நிலை என்னவாகும், நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்தி கொண்டனர்.

நீங்கள் எனது நண்பர், நாங்கள் எல்லா மொழியையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் எல்லாரும் மதிக்க வேண்டும் என விரும்புவதாக அஜய் தேவ்கன் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கிச்சா சுதீப்,  தங்கள் மீது குற்றம் சுமத்தவில்லை என கூறி டிவிட்டரில் மொழிப் போரை ஒரு வழியாக முடித்து வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்