போர் பூமியில் பெண் விமானியின் துணிச்சல்... உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட சிங்க பெண்
உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்டு வந்த இளம் பெண் விமானியை இந்த செய்தி தொகுப்பு மூலம் சந்திக்கலாம்.
உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்டு வந்த இளம் பெண் விமானியை இந்த செய்தி தொகுப்பு மூலம் சந்திக்கலாம்.
வீட்டை மட்டுமல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டிருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான்... மஹாஸ்வேதா சக்ரவர்த்தி
உக்ரைனில் சிக்கி தவித்து வந்த இந்திய மாணவர்களை மீட்க உடனடியாக "ஆபரேஷன் கங்கா"வில் கலந்து கொள்ளுமாறு நள்ளிரவில் அழைப்பு வரவே... பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் உடனடியாக போலாந்து விரைந்துள்ளார்.. மஹாஸ்வேதா.
பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை
4 முறை போலாந்தில் இருந்தும், 2 முறை ஹங்கேரியில் இருந்தும் சுமார் 800 இந்திய மாணவர்களை இவர் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
போர் பதற்றத்தால் திக்கு முக்காடி கொண்டிருந்தவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்ததால் இன்று இந்தியர் அனைவரின் இதயத்திலும் கதாநாயகியாக இடம்பிடித்துவிட்டார், மஹாஸ்வேதா.
இதுமட்டுமல்ல... கடந்த 4 ஆண்டுகளாக விமானியாக பணிபுரிந்து வரும் மஹாஸ்வேதா... கொரோனா நெருக்கடியின் போதும் இந்திய மக்களை காக்க வெவ்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருத்துவ உபகரணங்களையும் பெற்று வந்தவர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக மகளிரணியின் தலைவரான தனுஜா சக்ரவர்த்தியின் மகள்தான் மஹாஸ்வேதா. தன்னை போல, ஒவ்வொருவரின் கடின உழைப்பாலும், ஈடுபாட்டாலும் தான் ஆபரேஷன் கங்கா சாத்தியமானது என்பது அவரின் பணிவான கருத்து.
மஹாஸ்வேதாவை நிஜ ஹீரோயின் என்று உலகம் பொற்றலாம்... ஆனால், தண்ணீரின்றி , உணவின்றி, உயிருக்கு உத்தரவாதமின்றி பல நெருக்கடிகளை சந்தித்து, உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களே நிஜ ஹீரோக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story